மயிலிட்டித் துறைமுகத்தில் தரித்து நிற்கும் இந்தியப் படகுகள் நாளை ஏற்றிச் செல்லப்பட்டு அச்சுவேலித் கைத் தொழில் பேட்டையில் கொட்டப்படவுள்ளது.
ஜனாதிபதி அநுராகுமர திசநாயக்க செப்ரெம்பர் முதலாம் திகதி மயிலிட்டித் துறைமுகத்தை பார்வையிட வருவதனையடுத்து அப் பகுதியில் தற்போது தரித்து நிற்கும் 123 இந்தியப் படகுகளில் பெரும் பகுதி உடனடியாக அங்கிருந்து அகற்றப்படவுள்ளது.
மயிலிட்டியில் தரித்து நிற்கும் 123 இந்தியப் படகுகளில் 48 படகுகளின் வழக்குகள் நிலுவையில் உள்ளதுடன் 13 படகுகள் நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டன. இதில் 7 படகுகள் இந்திய மீனவர்களால் எடுத்துச் செல்லப்படவுள்ளது. இதேபோன்று 64 படகுகள் அரச உடமையாக்கப்பட்ட படகுகளும் தரித்து நிற்கின்றன.
அரச உடமையாக்கப்பட்ட 64 படகுகளில் முன்னாள் அமைச்சரின் பணிப்பில் மீனவ சங்கங்களிற்கு வழங்கப்பட்ட இரு படகுகள் தவிர்ந்த 62 படகுகளே இன்று முதல் மயிலிட்டியில் இருந்து அகற்றப்படவுள்ளது.
இவ்வாறு மயிலிட்டித் துறைமுகத்தில் உள்ள 62 படகுகளும் ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் இன்று வெளியே இழுத்து எடுக்கப்படவுள்ளது. அவ்வாறு எடுக்கப்படும் படகுகள் பாரம் தூக்கிகள் மூலம் தட்டு பார ஊர்திகளில் ஏற்றப்பட்டு அச்சுவேலிக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது




