ஜெனிவாவில் களமிறங்கினார் சிறிதரன் எம்.பி!

0
21

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடரின் பக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நேற்று செவ்வாய்க்கிழமை ஜெனிவாவைச் சென்றடைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன், அங்கு வேறு பல முக்கிய சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது.

இந்தக் கூட்டத் தொடரில் புதிதாக நிறைவேற்றும் நோக்கில் பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணை அனுசரணை நாடுகளால் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்ட இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் முதலாவது வரைவு கடந்த 9 ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன், அதில் திருத்தங்கள் உள்வாங்கப்பட்ட முதலாவது மீளாய்வு வரைவு கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

இவ்வாறானதொரு நிலையில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிறீதரன் எம்.பி., அங்கு நடைபெறவுள்ள பக்க நிகழ்வொன்றில் பங்கேற்கவுள்ளார்.

அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினதும், பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளினதும் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை அவர் நடத்துவார் என்றும், அதன்போது தமிழர்களின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here