உள்ளூராட்சி மன்ற சபைகளின் ஆட்சியமைப்பதில் ஆளும் கட்சியுடனோ அல்லது எதிர்க்கட்சிகளுடனோ ஒன்று சேராது தனித்துவமாக நாம் நடுநிலை வகிக்கிறோம். எம்மை நம்பி வாக்களித்த மக்களின் அபிலாஷைகளும், கறைபடியாத எமது அரசியலையும் எதிர்காலத்திலும் முன்னெடுக்கும் நோக்கிலேயே நாம் இந்த தீர்மானத்தை மேற்கொள்கிறோம். என மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
தேர்தல் காலங்களில் ஒருவரை ஒருவர் விமர்சித்து கட்சி அரசியலை மேற்கொண்டு அதன் பின்னர் சபைகளை அமைக்கும்போது விமர்சித்தவர்களுடனேயே கூட்டு சேரும் வழக்கத்தை கொண்ட பழைய அரசியல் முறைமை ஒழிய வேண்டும் என்பது எமதும், எம்முடன் இணைந்திருக்கும் இளைஞர்களின் எண்ணக்கருவாகும்.
1994ம் ஆண்டு சந்திரசேகரன் வென்ற ஒற்றை ஆசனத்தால் அரசாங்கத்தை அமைத்து அதன் மூலமாக பேரம் பேசி எம் மக்களுக்கான தனிவீட்டுத்திட்டம் முதலான மக்கள் நல திட்டங்களை பெற்றுக்கொடுத்த அந்த தலைவரின் வழியில் நாம் அரசியலை முன்னெடுக்கிறோம்.
மக்கள் நலனை புறந்தள்ளி வாக்களித்த மக்களை மறந்து வாக்களித்த மக்களின் அபிலாஷைகளை மறந்து தனிப்பட்ட அரசியலையும் சபைகளை கைப்பற்றுவதை மாத்திரம் நோக்கமாக கொண்ட டீல் அரசியல்வாதிகளுடன் நாம் ஒருபோதும் ஒன்றிணையப்போவதுமில்லை, அவர்களது அரசியல் எமது மக்களுக்கு நன்மை பயக்கப்போவதுமில்லை.
ஆகவே சந்திரசேகரன் மக்கள் முன்னணியாக நாம் எந்தவொரு தேசியக்கட்சியுடனோ, மலையக கட்சிகளுடனோ ஒன்றிணையாமல் உள்ளூராட்சி மன்றங்களில் தனித்த குரலாக மக்களின் குரலாக இருப்பதுவே சிறந்தது என என்ணுகிறோம்.
மக்களுக்கான நலத்திட்டங்களில் மக்களுக்கு ஆதரவாக வாக்களிப்போமே தவிர அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள சபைகளை அமைப்பதில் மும்முரமாக இருக்கும் எந்தவொரு அரசியல் சக்திக்கும் ஆதரவளிப்பதில்லை என்பதுடன் நடுநிலை வகிப்பது என்ற முடிவையும் ஏகமனதாக மேற்கொண்டிருக்கிறோம். என குறிப்பிட்டுள்ளார்.