இலங்கையில் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட எந்தவொரு சிறுவர்களுக்கும், இதுவரையிலும் எந்தவித கடுமையான பாதிப்புக்களும் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரையிலும், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 340,000 இற்கும் அதிகமான சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் ரஞ்சித் படுவன்துடாவ தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று முன்தினம் (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, 12 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட, நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட சுமார் 20,000 இற்கும் அதிகமான சிறுவர்கள் இந்த கொவிட் தடுப்பூசியைப் பெற்றிருக்கின்றார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்



