தலவாக்கலையில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு வந்த வேன் ஒன்று பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு பிரதான வீதியில் விழுந்துள்ளது.
இந்த விபத்து நேற்று (19) மாலை 5.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை சென்கிளயார் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு ஒரு குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று தேவாலயத்தின் பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் விழுந்ததால் விபத்து ஏற்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதிக்கு மேலே அமைந்துள்ள தேவாலயத்திற்கு வந்த வேன், ஒரு திருப்பத்தை எடுக்க பின்னோக்கிச் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சுமார் 15 அடி கீழே பிரதான வீதியில் விழுந்தது.
இந்த விபத்தில் வேனின் சாரதி மற்றும் மற்றொரு நபருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும், விபத்தில் வேன் பலத்த சேதமடைந்ததாகவும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.




