வல்வெட்டித்துறை -நெடியகாடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்த கணவனும் மனைவியும், நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வல்வெட்டித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட தகவலையடுத்து வல்வெட்டித்துறை பொலிசார் குறித்த இடத்திற்கு விரைந்தனர்.
வீடு தீப்பற்றி எரிந்துகொண்டு இருந்தவேளை வீட்டில் உள்ள இன்னொருவர் வீட்டை உடைத்துக்கொண்டு சென்று குறித்த தம்பதி உறங்கிக் கொண்டிருந்த அறையை பார்வையிட்டபோது அவர்கள் இருவரும் சடலமாக காணப்பட்டதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வல்வெட்டித்துறை – நெடியகாடு பகுதியைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது 30) மற்றும் கிருசாந்தினி (வயது 26) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்து சம்பவித்ததுக்கான காரணம் தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.




