பெற்ற மகன் துடுப்பாட்ட மட்டையால் தாக்கியதில் ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளரான தந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பிரிவிலுள்ள கல்லடியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளரான 65 வயதுடைய கடுசப்பிள்னை கருணாகரன் என்பவரே மரணமடைந்தவராவார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட 32 வயதுடைய மகன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 16ஆம் திகதி தன்னை கிரிக்கெட் மட்டையால் மகன் கடுமையாகத் தாக்கியதாக குறித்த தந்தை காத்தான்குடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டடைப் பதிவு செய்த அவர், தனது மனைவி சகிதம் வீட்டைவிட்டு வெளியேறி, கல்லடியிலுள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளார்.
18ஆம் திகதி குறித்த விடுதியிலிருந்து வெளியேறிய அவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 21ஆம் திகதி மரணமடைந்துவிட்டார் என வைத்தியசாலை நிர்வாகம், காத்தான்குடி காவல்துறைக்கு அறிவித்துள்ளது.
இதனையடுத்து காத்தான்குடி காவல்துறையினர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி சகிதம் மரணமானவரின் வீடு மற்றும் தங்கியிருந்த தனியார் விடுதி போன்ற இடங்களுக்கு நேற்று (22) மாலை நேரடியாகச் சென்று தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர். அத்துடன், போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தையும் நீதவான் பார்வையிட்டு, பிரதேச பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.