தலவத்துகொடை பகுதியில் உள்ள இரவு விடுதிக்கு அருகில் இன்று (19) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கலால் திணைக்கள அதிகாரி மற்றும் ஒரு தொழிலதிபரை விளக்கமறியலில் வைக்க கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இரண்டு சந்தேக நபர்களும் ஜூலை 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 1.00 மணியளவில் குறித்த இரவு விடுதிக்கு அருகில் தொழிலதிபருக்கும் கலால் அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்தின் போது, தொழிலதிபர் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்து கலால் அதிகாரியை நோக்கி நீட்டியதாகவும் இதன்போது, கலால் அதிகாரி தொழிலதிபரிடமிருந்து ஆயுதத்தைக் கைப்பற்றி, அருகிலுள்ள சுவரில் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தி அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தலங்கம காவல் நிலைய அதிகாரிகள் குழு பின்னர் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் கைது செய்தது.
சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கலால் அதிகாரி விக்கிரமசிங்கபுர கலால் அலுவலகத்தில் பணியாற்றுபவர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.