அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு ட்ரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் கடந்த 2019-ல் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.தென்கொரியா தாக்குதல் நடத்தினால் அவர்கள் மீது அணு ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்படும் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால், தென்கொரியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1948-ல் கொரியா நாடு வடகொரியா, தென் கொரியா என 2 ஆக பிரிந்ததில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே எல்லை பிரச்னை இருந்து வருகிறது. இரு நாடுகளும் தங்களை தற்காத்துக் கொள்ள ஆயுத பலத்தை பெருக்கி வருகின்றன. செல்வச் செழிப்பு மிக்க தென்கொரியாவுக்கு அமெரிக்காவின் ஆதரவு உள்ளது. வறுமையில் வாடும் வடகொரியா, அணு ஆயுதங்களை பலப்படுத்தி தன்னை தற்காத்துக் கொண்டும் அண்டை நாடான தென்கொரியாவை தொடர்ந்து அச்சுறுத்தியும் வருகிறது.
அணு ஆயுத நாடாக இருப்பதால் வடகொரியாவை மிரட்டுவதற்கு வல்லரசு நாடுகளும் தயக்கம் காட்டுகின்றன. இந்நிலையில், தென்கொரியா தங்களை தாக்கினால் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் அணு ஆயுத தாக்குதலை நடத்துவோம் என்று வடகொரியா எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பை வடகொரிய அதிபரின் சகோதரியும், அவருக்கு அடுத்தபடியாக சக்திமிக்கவர் என்று கருதப்படும் கிம் யோ ஜாங் வெளியிட்டுள்ளார்.