லண்டன், லோட்ஸ் மைதானத்தில் நேற்று (11) ஆரம்பமான உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டியின் ஆரம்பத்தில் தென்னாபிரிக்க அணி ஆதிக்கம் செலுத்தியது. பகல் போசண இடைவேளைக்காக போட்டி நிறுத்தப்படும்போது முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட அவுஸ்திரேலிய அணி 23.2 ஓவர்களில் 67 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்டுள்ளது.
துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ரபாடா நெருக்கடி கொடுத்தார். ஆரம்ப வீரர் உஸ்மான் கவாஜாவை டக் அவுட் செய்த அவர் அடுத்து வந்த கெமரூன் கிரீனை 4 ஓட்டங்களுடன் வெளியேற்றினார். இதனால் ஆஸி. அணி 16 ஓட்டங்களை பெறுவதற்குள் முதல் இரு விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
தொடர்ந்து மறுமுனை ஆரம்ப வீரர் மார்னஸ் லபுஷேனினால் 17 ஓட்டங்களையே பெற முடிந்தது. தொடர்ந்து முக்கிய வீரரான டிரவிஸ் ஹெட்டும் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும் பகல் போசண இடைவேளை வரை களத்தில் இருந்த ஸ்டீவன் ஸ்மித் 26 ஓட்டங்களை பெற்றிருந்தார்.