இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ஸன்டெல் எட்வின் ஷால்க் (Sandile Edwin Schalk), சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் (18) பாராளுமன்றத்தில் சந்தித்தார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.
தென்னாப்பிரிக்காவுடன் 1994 ஆம் ஆண்டில் இலங்கை இராஜதந்திரத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டதாகக் குறிப்பிட்ட சபாநாயகர், வர்த்தகம், சுற்றுலாத்துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தல் மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை இதன்போது சுட்டிக்காட்டினார். தென்னாபிரிக்காவின் நல்லிணக்க பொறிமுறையானது சமாதானம் தொடர்பில் உலகிற்கு முக்கியமான செய்தியை தெரிவிப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டதுடன், இலங்கைக்கு தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவிற்கு தென்னாப்பிரிக்க அரசுக்கு நன்றியையும் தெரிவித்தார்.
தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ஸன்டெல் எட்வின் ஷால்க், நல்லிணக்க வழிமுறைகளை மேம்படுத்தும் அதேவேளை, அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட தென்னாபிரிக்க அரசாங்கத்தின் தொடர்ச்சியான புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி முயற்சிகளை விளக்கினார். அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற மற்றும் இருதரப்பு தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கை – தென்னாப்பிரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீண்டும் புதுப்பிப்பதன் முக்கியத்துவத்தையும் உயர் ஸ்தானிகர் வலியுறுத்தினார்.
அத்துடன், உயர்ஸ்தானிகருக்கும் கௌரவ சபாநாயகருக்கும் இடையிலான சுமுகமான கலந்துரையாடலில் பரஸ்பர ஆர்வமுள்ள பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.