தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பெயரை பயன்படுத்தி போலி சமூக ஊடகக் கணக்குகள் இயங்கி வருவதாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் ஆர்.சி. ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவது,
“தெஹிவளை மிருகக்காட்சிசாலை”, “இலங்கை தேசிய மிருகக்காட்சிசாலை” போன்ற பெயர்களில் போலி முகநூல் கணக்குகள் இயங்கி வருவதுடன் அவற்றின் ஊடாக பொதுமக்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் ஆண்டு நிறைவை முன்னிட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் எனவும் கூறி பொதுமக்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊடாக இவ்வாறான போட்டிகள் ஏற்பாடு செய்யப்படவில்லை.
இவ்வாறான போட்டிகள் தொடர்பில் தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊடாக உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பெயரை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றுவது குறித்து மிகவும் கவலையாக உள்ளது.
இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களுக்க எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறோம் என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.