நகரங்களுக்கு இடையிலான கடுகதி தொடருந்து சேவைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர எமது செய்தி சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.
இரவுநேர அஞ்சல் தொடருந்து மற்றும் வழமையான நேர அட்டவணைக்கு அமைய இரவு 7 மணிக்கு பின்னர் இடம்பெறும் தொடருந்து சேவைகளுடன், குறுந்தூர தொடருந்து சேவைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதை அடுத்து கடந்த முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான அலுவலக தொடருந்து சேவைகள் மாத்திரம் ஆரம்பிக்கப்பட்டன.
இருப்பினும் தற்போது வரையில் இரவு 7 மணிக்கு பின்னரான தூரப் பிரதேசங்களுக்கான தொடருந்து சேவைகளும், குறுந்தூர தொடருந்து சேவைகளும் வழமை போன்று இடம்பெறுவதில்லை.
நடைமுறையில் உள்ள முறைமைக்கு அமைய இரவு 7 மணிக்கு பின்னர் பயணிகளின் அவசியத்தன்மை கருதி மாத்திரம் தொடருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுப்பதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.