பல்கலைக்கழக நண்பனை தலைமை கணக்காய்வாளராக நியமிப்பதற்காகவே தலைமை கணக்காய்வாளர் பதவியை ஜனாதிபதி வறிதாக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவையின் 3 சிவில் பிரஜைகளின் எதிர்ப்பினால் ஜனாதிபதியின் நோக்கம் தோல்வியடைந்துள்ளது. இம்மூவரின் பதவி காலம் எதிர்வரும் ஜனவரி மாதம் நிறைவடைந்தவுடன் ஜனாதிபதி தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வார் என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, 2025.04 மாதத்தில் இருந்து தலைமை கணக்காய்வாளர் பதவி வெற்றிடமாகியுள்ளது.இந்த பதவிக்கு கல்வி தகைமை மற்றும் தொழில் தகைமை உள்ள தர்மபால கம்மன்பில என்பவரை நியமிக்குமாறு கணக்காய்வாளர் சங்கம் ஜனாதிபதிக்கு வலியுறுத்தியுள்ள நிலையில், திணைக்களத்தின் இதர அதிகாரிகள் இந்த கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
தலைமை கணக்காய்வாளர் பதவிக்கு கணக்காய்வாளர் திணைக்களத்தில் பதவி நிலை அடிப்படையில் தர்மபால கம்மன்பில என்பவர் உள்ள நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது களனி பல்கலைக்கழகத்தில் நண்பரை இந்த பதவிக்கு நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
அரசியலமைப்பு பேரவைக்கு தனது நண்பரின் பெயரை சிபாரிசு செய்துள்ளார். ஜனாதிபதியின் சிபாரியை அரசியலமைப்பின் மூன்று சிவில் பிரஜைகள் எதிர்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் பெயர் முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது.
மழைக்குகூட கணக்காய்வாளர் திணைக்களத்தின் பக்கம் ஒதுங்காத ஒருவரை பல்கலைக்கழக நண்பர் என்ற காரணத்துக்காக தலைமை கணக்காய்வு அதிபதியாக நியமிக்கும் முயற்சியை அரசியலமைப்பு பேரவையின் 3 சிவில் பிரஜைகள் தோற்கடித்துள்ளார்கள். இந்த மூவரின் பதவி காலம் 2026.01.03 ஆம் திகதியுடன் நிறைவடையும் இதன் பின்னர் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே பதில் தலைமை கணக்காய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயற்பாடு முறையற்றது. தமது அரசாங்கம் ஊழல் மோசடியற்ற வகையில் செயற்படும் என்று குறிப்பிடும் ஜனாதிபதி ஏன் விடயதானத்துடன் தொடர்பில்லாத ஒருவரை தலைமை கணக்காய்வாளராக நியமிக்க முயற்சிக்க வேண்டும். கணக்காய்வு திணைக்களம் சுயாதீனமான முறையில் செயற்பட்டால் தான் ஊழலை இல்லாதொழிக்க முடியும்.அரசாங்கத்தின் முறையற்ற போக்கினை நாட்டு மக்கள் அவதானிக்க வேண்டும் என்றார்.