நாடாளுமன்றம் சென்ற எமது மலையக பிரதிநிதிகள் என்ன செய்தனர்? தொலைக்காட்சி விவாதங்களில் கூட அடித்துக்கொள்ளும் நிலைமை அல்லவா காணப்பட்டது

0
10

“இலங்கையில் கொள்கை அரசியலை முன்னெடுத்த பெருந்தலைவர் அமரர் சந்திரசேகரனின் மகள்தான் நான். மாறாக கோடிகளுக்கு விலைபோகும் நபர் கிடையாது. கோடிகளை வாங்கிய அரசியல்வாதிகளே, இன்று கோடிகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர்.” – என்று ஐக்கிய ஜனநாயக குரல் எனும் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

தலவாக்கலையிலுள்ள தேர்தல் அலுவலகத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ 2020 பொதுத்தேர்தலில் நான் சுயேச்சையாக களமிறங்கி இருந்தேன். அப்போதுகூட முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்சவிடம் 20 கோடி ரூபா பணம் வாங்கிவிட்டே தேர்தலில் போட்டியிட்டதாக எதிரணி தரப்பில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. அதுமட்டுமல்ல வாக்குகளை சிதறடிப்பதற்காகவே நான் களமிறக்கப்பட்டுள்ளேன் என்றெல்லாம்கூட தகவல்கள் பரப்பட்டன. ஆனால் இவை எதுவும் உண்மை அல்ல. எனது தந்தையின் நண்பர்களின் உதவியுடன்தான் பொதுத்தேர்தலை எதிர்கொண்டேன்.

தேர்தலில் மக்கள் எனக்கு ஆதரவு வழங்கி இருந்தனர். எனினும், நாடாளுமன்றத்துக்கு தெரிவாகக்கூடிய வாக்குகளை நோக்கி நகரமுடியவில்லை. இவ்வாறு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெறாததால் அரசியல் ரீதியில் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டேன். எனக்காக வேலை செய்த தொண்டர்களைக்கூட பழிவாங்கினார்கள். இதற்கு எதிராக குரல் எழுப்பினேன். அவ்வாறு குரல் எழுப்பும்வேளைகளில் பழிவாங்கல்கள் அதிகரித்தன. அதன்பின்னர் அமைதி காத்தேன். அடக்குமுறைகள் குறைந்தன. எனவே, அரசியலில் அமைதியும் தேவையெனக் கருதி அமைதி காத்தேன்.

நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்காத நான் ஐந்து வருடங்கள் எங்கே சென்றேன் எனக் கேட்கின்றனர். ஆனால் நாடாளுமன்றம்சென்ற எமது மலையக பிரதிநிதிகள் என்ன செய்தனர்? தொலைக்காட்சி விவாதங்களில்கூட அடித்துக்கொள்ளும் நிலைமை அல்லவா காணப்பட்டது?

பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து களமிறங்க வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது. எனினும், அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதன்பின்னர் சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டிருந்தேன். அவ்வேளையிலேயே தலைவர் ரஞ்சன் ராமநாயக்க என்னை அழைத்து கதைத்தார். ஊழல் அற்ற அரசியலை செய்வதற்காக புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளதாகக் கூறினார். அதில் போட்டியிடுமாறு கேட்டுக்கொண்டார். ஐக்கிய ஜனநாயகக் குரல் என்ற அந்த கட்சியின் கொள்கை பிடித்திருந்தது . அதனால்தான் அக்கட்சி ஊடாக களமிறங்கியுள்ளேன்.

2020 இல் பஸில் ராஜபக்சவிடம் பணம் வாங்கியதாகக் கூறினார்கள். அது உண்மையெனில் தேர்தலின் பின்னர் நான் ஆளுங்கட்சியுடன் பதவிகளை பெற்று அல்லவா இருந்திருக்க வேண்டும்? அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. கடந்த முறை 20 கோடி என்றவர்கள் இம்முறை 15 கோடி என்கிறார்கள். இது பொய். கோடிகளுக்கு விலைபோகும் நபர் நான் கிடையாது. எனது தந்தை அமரர் சந்திரசேகரனின் வழியிலேயே நான் பயணிக்கின்றேன். கொள்கை அரசியலை முன்னெடுத்த தலைவரின் மகள் நான். எனவே, கோடிகளுக்கு விலைபோனவர்கள்தான் இன்று கோடிகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர்.

மலையக மக்களுக்கு நான் எதுவும் செய்யவில்லை என என்னை பற்றி அறியாத சிலரே விமர்சிக்கின்றனர். திரைமறைவில் பல நலன்புரி திட்டங்களை முன்னெடுத்துவருகின்றேன். அவற்றை வெளிப்படுத்த விரும்பவில்லை. இதற்கு நலன்விரும்பிகளும் உதவிகளை வழங்கிவருகின்றனர்.

மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை நிச்சயம் மாற்றம் வரும். பழைய அரசியல்வாதிகளை நம்பி ஏமாந்ததுபோதும், இளைஞர்கள், புதியவர்கள் வரவேண்டும் என மக்கள் கருதுகின்றனர். எனவே, மக்களுக்காக குரல் கொடுக்கும் என்னை அவர்கள் சபைக்கு அனுப்பி வைப்பார்கள். நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவேன்.” – என்றார்.

 

(க.கிஷாந்தன்)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here