“இந்த நாட்டிற்கு டொலர் வருமானத்தை ஈட்டித் தருகின்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு நிம்மதியாக வாழ முடியாத நிலைமை இந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ளது” என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
மே தினத்தை முன்னிட்டு தொழிலாளர் தேசிய சங்கத்தின் அட்டன் தலைமை பணிமனையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகள் மற்றும் கொடியேற்றும் நிகழ்வுகளை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ். பிலிப், தொழிலாளர் தேசிய முன்னணியின் உப தலைவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான மு.ராம், ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினர்களான பாலசுப்ரமணியம் ,திருமதி ராமேஸ்வரி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் முழுநேர உத்தியோகஸ்தர்களும் ஏனைய ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:
தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த தினமாக உலகெங்கும் மே தினம் நினைவு கூரப்படுகின்றது. அந்த வகையில் மே தினத்தை தொழிலாளர் தேசிய சங்கம் ஒரு உன்னத தினமாகக் கருதி ஒவ்வொரு வருடமும் அனுஷ்டித்து வருகின்றது.
1965 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அமரர் வி.கே.
வெள்ளையனால் ஆரம்பிக்கப்பட்ட. ஸ்தாபனம் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகும்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடாக கடந்த காலங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கு பல்வேறு உரிமைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கு ஏற்ப இம்முறை தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதின நிகழ்வுகள் தோட்ட வாரியாகவும் பிரதேச வாரியாகவும் கொண்டாடப்பட்டன.
தற்போதைய முறையற்ற ஆட்சி காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் உட்பட நாட்டின் சகல மக்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரி நடைபெறுகின்ற போராட்டத்திற்கு தொழிலாளர் தேசிய சங்கம் தனது ஆதரவை வழங்கி உள்ளது.
தொழிலாளர்களின் உரிமைக்காக தொழிலாளர் தேசிய சங்கம் தொடர்ந்து போராடும் என்பதை இந்த மேதின தினத்தன்று நாங்கள் உறுதி கூறுகின்றோம்.