நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையால் நுவரெலியா பதுளை பிரதான வீதியின் மாநகரசபை மைதானத்திற்கு அருகாமையில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர் . மரம் முறிந்து விழுந்த சந்தர்பத்தில் ஒரு மருங்கில் மாத்திரம் போக்குவரத்து இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் ஊர் மக்களுடன் நுவரெலியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் இணைந்து முறிந்து வீழ்ந்துள்ள மரத்தை உடனடியாக வெட்டி அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர் அதன்பின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதனால் வாகனங்களை வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செலுத்த வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ச்சியாக நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் ஏராளமான இடங்களில் மரங்கள் மற்றும் மரக்கிளைகள், மின்கம்பிகள் மீது விழும் சம்பவம் காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகின்றது.
அத்துடன் நுவரெலியா – ஹற்றன் பிரதான வீதியில் நானுஓயா பகுதியில் கற்பாறைகளுடன் மண்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வீதி சேதமடைந்து காணப்படுவதால் மண்சரிவு சமிக்ஞைகள் வீதியோரத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது எனவே இவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் அவதானமாக இருக்குமாறு நானுஓயா போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.