மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (21) பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அத்துடன் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் இன்று காலை தெரிவித்துள்ளது.
தற்காலிக பலத்த காற்று மற்றும் மழை, இடியுடன் கூடிய மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அடுத்த 24 மணி நேரத்தில் புத்தளம் முதல் கொழும்பு வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும்.
நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் தென்மேற்கிலிருந்து காற்று வீசக்கூடும், காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் இருக்கும்.
மேலும், சிலாபம் முதல் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் பொத்துவில் வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலும் கடற்கரையோரக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-55 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
சிலாபம் முதல் கொழும்பு மற்றும் காலி முதல் மாத்தறை வரையிலும், காங்கேசன்துறை முதல் முல்லைத்தீவு வழியாக திருகோணமலை வரையிலும் கடற்கரையோரக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 45 கிலோமீற்றர் வரை காணப்படும்.
இதற்கிடையில், சிலாபம் முதல் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக இருக்கும்.
சிலாபம் முதல் கொழும்பு மற்றும் காலி வழியாக மாத்தறை வரையிலும், காங்கேசன்துறை முதல் முல்லைத்தீவு வழியாக திருகோணமலை வரையிலும் உள்ள கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக இருக்கும் என திணைக்களத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.