வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நுவரெலியா மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட புதிய பிரதேச செயலகங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முன் வர வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேண்டுகோளுக்கு இணங்க நுவரெலியா மாவட்டத்தில் நோர்வூட், தலவாக்கலை,நில்ஹிண்டாதென்ன ஆகிய புதிய பிரதேச செயலகங்கள் ஏற்படுத்தப்பட்டன.எனும் இந்த பிரதேச செயலகங்கள் உரிய முறையில் நடைமுறைப் படுத்தப்படவில்லை.
ஆனால் இன்றைய அரசாங்கத்தில் இந்த பிரதேச செயலகங்களுக்கு பதிலாக உப பிரதேச செயலக காரியாலயங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ள போதும் இவற்றினால் எவ்வித பயனும் மக்களுக்கு கிடைக்கவில்லை.
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலகம் மற்றும் இந்த மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் தமிழ் மொழி தெரிந்த உயர் அதிகாரிகள் நியமிக்கப்படாத காரணத்தினாலும் தமிழ் பேசும் மக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்விடயம் தொடர்பிலும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஸ்ரீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.