நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் சுமார் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்களுடன் தரையிறங்க முற்பட்ட விமானம் ஒன்று, விபத்தில் சிக்கி உலகெங்கிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், எட்டி ஏர்லைன்ஸ் விமானத்தின் துணை விமானியாக செயல்பட்ட பெண் குறித்தும் சில உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.
நேபாள விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் துணை விமானியாக செயல்பட்டவர் அஞ்சு கதீவாடா. அந்த விமானம் தரையிறங்கி இருந்தால் அவருக்கு தலைமை விமானி என்ற உரிமம் வழங்கப்பட இருந்தது. இதனால், அஞ்சு துணை விமானியாக செயல்படும் கடைசி பயணமாகவும் இது இருந்துள்ளது.
துணை விமானியாக கடைசி விமான பயணத்தை அஞ்சு மேற்கொண்ட போது தான் அந்த விமானம் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது. துணை விமானியாக நேபாளத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் வெற்றிகரமாக அஞ்சு தரை இறங்கியுள்ளார்.
இன்னொரு பக்கம், அஞ்சுவுக்கு நேர்ந்த துயரம் போலவே அவரது கணவரும் விமான விபத்து ஒன்றில் சிக்கித் தான் உயிரிழந்துள்ளார். துணை விமானியாக இருந்த அஞ்சுவின் கணவர், கடந்த 2006 ஆம் ஆண்டு விமான விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்ததாக தெரிய வருகிறது.
அஞ்சுவின் கணவர் இருந்த விமானத்தில் 6 பயணிகள் மற்றும் இரு விமானிகள் உட்பட நான்கு ஊழியர்களும் உயிரிழந்தனர். அந்த விமானமும் தரையிறங்க சில நிமிடங்கள் இருக்கும் போது தான் விபத்தில் சிக்கி உள்ளது.
அப்படி இருக்கையில், சுமார் 16 ஆண்டுகள் கழித்து அஞ்சுவும் விமானியாகும் கனவு நிறைவேறும் தருணத்தில் அதே போல விபத்தில் சிக்கி உயிரிழந்தமை, பலரையும் மனம் கலங்க வைத்துள்ளது.