பதுளை மண்ணிலிருந்து முதல் நீதிபதியாக நியமனம் பெற்றுள்ளார் மலையக பெண் சட்டத்தரணி!
பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த கடந்த பத்து வருடங்களாக சட்டத்தரணியாக சேவையாற்றிய சட்டத்தரணி ஆனந்தவதனி புஷ்பராஜ் , 2024 ஆம் ஆண்டு இலங்கை நீதித்துறைக்கு நீதவனாக ஆட்சேர்க்கும் போட்டி பரிட்சையில் சிறப்பு சித்தி பெற்று அண்மையில் இடம்பெற்ற நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்று நீதவானாக நியமனம் செய்யப்படவுள்ளார்.
இவர் பண்டாரவளை நீதிமன்ற சிரேஷ்ட சட்டத்தரணி சிரில் ராஜின் மனைவியும், பசறை ஜெயந்தி பேக்கரி உரிமையாளரான ராசு புஷ்பராஜ் ஜெயந்தி ராணி தம்பதியினரின் மகளும் ஆவார்.
பதுளை மாவட்டத்தில் மலையக தமிழ் மக்கள் சார்ந்து தெரிவு செய்யப்படும் முதலாவது நீதிபதியும், முதல் பெண் நீதிபதியும் ஆவார்.
ஏழு வருடங்களின் பின்னர் நீதித்துறைக்கு மலையகத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டிருக்கும் இவர், தன்னுடைய ஆரம்பக் கல்வியை பசறை தமிழ் தேசிய கல்லூரியிலும், உயர்கல்வியை மட்டக்களப்பு வின்சன் மகளிர் தேசிய பாடசாலையிலும் நிறைவு செய்தார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பீடத்தில் சட்டமானி பட்டத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் சட்டக் கல்லூரியில் தனது தொழில்நிலை படிப்பை மேற்கொண்டார்.
2013 ஆம் ஆண்டிலிருந்து பத்து வருடங்களாக பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்திலும் தொழில் நியாய சபை நீதிமன்றத்திலும் சேவையாற்றி மலையக மக்கள் சார்ந்து பல்வேறு வழக்குகளில் சட்டத்தரணியாக சேவைபுரிந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.