புதிதாக திருமணமான இளைஞன், தனது பழைய காதலியுடன் மதவாச்சி பிரதேசத்தில் உள்ள தற்காலிக விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில், நேற்று (1) மாலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞன் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மதவாச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் குறித்த இளைஞன், பொலனறுவை செவனப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் தனது முன்னாள் காதலி என கூறப்படும் யுவதியுடன் மதவாச்சி பிரதேசத்தில் உள்ள தற்காலிக தங்கும் விடுதிக்கு வந்து அறையொன்றில் தங்கியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த இளைஞர் வேறு ஒரு பெண்ணுடன் இருந்ததை அறிந்துகொண்ட யுவதி இதுபற்றி வினவியுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாததில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முன்னாள் காதலி குத்த முயன்றபோது இளைஞரின் கையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் காதலி என கூறிக்கொண்ட இளம்பெண் தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
விடுதியின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் உடனடியாக இருவரையும் மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.