அட்டன் சமூக நல நிறுவகத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு பாரபட்சங்களை தகர்ப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் 13.03.2022 அன்று அட்டனில் நடைபெற்றது.
அட்டன் சமூக நல நிறுவகத்தின் பணிப்பாளர் அருட்தந்தை பிரேம்குமார் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சி.யோகித்தா ஆகியோரின் தலைமையில் அட்டன் சமூக நல நிறுவகத்தின் மகளிர் தின விழா (13.03.2022) அன்று அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை அட்டன் விடிவெள்ளி மகளிர் மன்றம் ஏற்பாடு செய்திருந்தனர்.
தொழிலாளர்களின் பிரச்சினைகள், அத்தியாவசிய பொருட்களுக்கான விலைவாசி அதிகரிப்பு, கல்வி தொடர்பான பிரச்சினைகள், சிறுவர், பெண்கள் உரிமைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி பேரணியாக சென்றனர்.
அட்டன் சமூக நல நிறுவன காரியாலயத்திற்கு முன்பாக ஊர்வலம் ஆரம்பமாகி அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மண்டபத்தை சென்றடைந்ததும் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
இந்த நிகழ்வில் பேராதெனிய பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், மனித உரிமை மீறல்க்கான செயற்பாட்டாளருமான திருமதி.சோபனா தேவி, அட்டன் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவிற்கான பொறுப்பதிகாரி திருமதி. குமாரி விஜயசிங்க, அட்டன் கல்வி வலய பணிமனையின் ஆசிரிய ஆலோசகர் திருமதி.ஏ.தமயந்தி, இலங்கை இயேசு சபையின் முதல்வர் டெக்ஸ்டர் கிரே மலையக மகளிர் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது கலந்து கொண்ட பெண்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
(க.கிஷாந்தன்)