ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் இந்தியாவுக்கு எதிராக கூடுதல் 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இதன் மூலம் இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவின் வரி விதிப்பு 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் இந்த வரி மிரட்டலை கண்டுகொள்ளாத இந்தியா, ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது.
இதனால், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் முன்வைத்து வருகிறது. ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்கவே இந்தியாவுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டதாக அமெரிக்கா தனது செயலை நியாயப்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்பால் இந்தியா- அமெரிக்கா வர்த்தக உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடியுடன் விரைவில் பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் டிரம்ப் கூறியிருப்பதாவது: இருநாடுகளுக்கு இடையேயன வார்த்தக விவகாரம் தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. வரும் வாரங்களில் பிரதமர் மோடியுடன் பேசுவதை எதிர்நோக்கியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.