யாழ். சுன்னாகம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோய்ன் போதை பொருளுக்கு அடிமையான இளைஞன் ஒருவரால் பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் 22 வயதுடையவர் எனவும் பாதிக்கப்பட்ட மாணவி 15 வயதுடையவர் எனவும் சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சந்தேக நபரான இளைஞன் தலைமறைவாகி உள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட மாணவி, சந்தேக நபரான இளைஞனை காதலித்து வந்தார் எனவும், ஹெரோய்ன் போதை பொருளுக்கு அடிமையான பின்னர் குறித்த இளைஞனுடனான தொடர்புகளை துண்டித்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் மாலை பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது சகோதரியும் வகுப்பு முடிவடைந்து வீடு திரும்பிய வேளையில் சந்தேக நபர் வீதியில் விழுந்து கிடந்துள்ளார்.
அவரை தூக்கி வீட்டுக்கு அனுப்பி விட்டு, பின்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது சகோதரியும் சென்றுள்ளனர்.
இதன்போது ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் பாதிக்கப்பட்ட மாணவியை சந்தேக நபர் இழுத்து சென்றுள்ளார்.பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரி, ஊரவர்களையும் உறவினர்களையும் உடனடியாக சம்பவ இடத்திற்கு அழைத்துள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர் தப்பி சென்றுள்ளார். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.