இலவச சுகாதாரம் என்பது மக்களது மனித உரிமையாகும். இலவச சுகாதார கட்டமைப்பினுள் வினைதிறனான சேவைகளைப் பெறுவது நாட்டு மக்களுக்கு அடிப்படை உரிமையாக அமைந்து காணப்பட்டாலும், இத்தருணத்தில் நமது நாட்டின் சுகாதார கட்டமைப்பில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதே இதற்குக் காரணமாகும். புற்றுநோய் நோயாளிகள், இதய நோயாளிகள், உயர் இரத்த அழுத்த நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும் மருந்துகளுக்கும், வலி நிவாரணிகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கும் கடுமையான தட்டுபாடு நிலவுகின்றன. கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் 180 க்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு இவ்வாறு தட்டுப்பாடு காணப்படுகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ள இந்நேரத்தில், நாட்டு மக்களை உயிருடன் வைத்திருக்கத் தேவையான மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். பல ஆண்டுகளாக நடைமுறையில் காணப்படும் விலைமனு செயல்முறையை மட்டும் சுட்டிக்காட்டாமல், இந்த மருந்துப் பிரச்சினைக்கு அவசரத் தீர்வை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். மக்களின் உயிர்வாழ்வை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாக அமைந்து காணப்படுவதனால், மனித உயிர்களைக் கருத்தில் கொண்டு இந்த கடுமையான பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.