நாட்டில் மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகள் இன்று (12) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நீர் மின் உற்பத்தி அதிகரிப்பதன் பயனை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.மேலும் மின் உற்பத்தி நிலையங்கள் தொடர்பான நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 96 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மின் கட்டணம் குறைக்கப்பட்டவுடன், நீர் கட்டணமும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கண்டியில் நேற்று (11)கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
மக்களுக்கு அதிகபட்ச நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நீர்க் கட்டணம் தொடர்பான விலைச்சூத்திரத்தை அறிமுகம் செய்ய உள்ளோம்.மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாங்கள் செயற்படவில்லை. தண்ணீரை சுத்திகரிக்க தேவையான முக்கிய காரணிகளில் மின்சாரம் ஒன்று.
எனவே மின் கட்டணம் குறைக்கப்பட்டால் கண்டிப்பாக நீர்க் கட்டணம் குறைக்கப்படும்“ என தெரிவித்தார்.




