மன்னிப்புக் கோரினார் சுமன ரத்ன தேரர்!

0
105

தென்னிலங்கையிலுள்ள தமிழர்களை வெட்டுவேன் எனக் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துத் தொடர்பாக அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் மன்னிப்புக் கோரியுள்ளார். இவ்விடயம் தொடர்பாகக் காணொலி ஒன்றை வெளியிட்டு தனது கருத்தை அவர் பதிவு செய்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மட்டக்களப்பு, ஜயந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள மயானம் கடந்த 21ஆம் திகதி தரைமட்டமாக்கப்பட்டது. அங்கு எனது தாயின் சமாதியும் உள்ளதால், பொலிஸாருடன் அந்தப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டேன். இதன்போது சிலர் என்னைத் தூண்டும் வகையில், காணொலிகளை எடுக்க ஆரம்பித்தமையால், நானும் கோபத்தில் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தேன்.

இதனைத் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர், தமிழ் மக்களைக் குழப்புவதற்காகப் பயன்படுத்தி வருகின்றார்கள். நான் கூறிய கருத்துக்கள் இனவாதத்தைத் தூண்டும் கருத்துக்கள் எனத் தமிழ் மக்களிடம் அவர்கள் கூறி வருகின்றார்கள்.

விசேடமாக, கூட்டமைப்பின் உறுப்பினர் இரா. சாணக்கியன், இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில், நான் ஒரு பைத்தியக்காரன் என்றும், எனது தாயின் சமாதி அங்கே இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதிலிருந்தே, சாணக்கியன்தான் இந்த மயானத்தை உடைக்கப் பணித்துள்ளார் என நான் தெரிந்துகொண்டுள்ளேன்.

அப்படி அவர் செய்யாவிட்டால், இந்தச் செயற்பாட்டை ஏன் அவர் சரியாகக் காண்பிக்க முற்பட வேண்டும்?

இது தொடர்பாக நீதிமன்றத்துக்குச் சென்றபோது, மயானத்தைத் தரைமட்டமாக்கிய தரப்பினர் குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு, மீண்டும் மயானத்தை அமைத்துத் தருவதாகவும் கூறியுள்ளனர்.

நானும், தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக நீதிமன்றத்திடம் அறிவித்தேன். நான் கவலையுடன்தான்
அன்று அவ்வாறு பேசினேன்.

இது இனவாதக் கருத்து கிடையாது. தனி ஈழம் வரப்போவதாகத் தெரிவித்து, தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே சில நபர்கள் இவற்றைப் பயன்படுத்துகின்றார்கள். இதனை அனைத்து மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here