இஸ்ரேல் இராணுவம் காசாவில் தரைவழித் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், அப்பாவி பொதுமக்கள் நகரத்தை விட்டு வெளியேற அனுமதிக்கும் வகையில் தற்காலிக போக்குவரத்து பாதை திறக்கப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் , கடந்த 2023ல் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல், காசா மீதான தாக்குதலைத் தொடங்கியது.
ஹமாஸ் அமைப்பினரை அடியோடு ஒழிக்கும் வரை போரை நிறுத்தப்போவதில்லை என்று இஸ்ரேல் திட்டவட்டமாக கூறி வருகிறது.
இதன்படி, இஸ்ரேல் ராணுவம் காசா நகரை கட்டுப்பாட்டில் எடுக்கும் நோக்கில் தரை வழி தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளது. காசா நகரில், 3,000 ஹமாஸ் அமைப்பினர் இருப்பதாக இஸ்ரேல் ராணுவத்தினர் சந்தேகிக்கின்றனர்.
எனவே ஹமாஸ் அமைப்பினரின் கோட்டை என்று அழைக்கப்படும் இடத்தில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற முயற்சிக்கின்றன.
அந்த சாலையில் கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால், சலா அல்-தின் சாலை வழியாக பொதுமக்கள் வெளியேறலாம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்த பாதை 48 மணி நேரம் மட்டுமே திறந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்கள் தொடரும் நிலையில், பல குடும்பங்கள் வெளியேற முடியாமல் சாலையோரங்களில் சிக்கித் தவிக்கின்றன.
இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடவடிக்கையை ஐ.நா., மனித உரிமைகள் ஆணையமும், ஜெர்மன், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் கடுமையாக கண்டித்துள்ளன.