நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டிலும் கணத்த மழை பெய்து வருகிறது. நீரேந்தும் பிரதேசங்களில் பெய்து வரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து சில நீர்த்தங்களில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
கெனியோன் லக்ஸபான ஆகிய இரு நீர்த்தேக்கங்களில் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், விமலசுரேந்திர நீர் தேக்கத்தில் நீர் வான் பாய்ந்து வருவதாகவும் மின்சார சபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
எனவே இந்த நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதே நேரம் காசல்ரி நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் உயர்ந்து வான் பாயும் அளவினை எட்டியுள்ளதுடன் மவசாகலை நீர்த்தேக்கத்தில் நீர் மட்டமும் கனிசமான அளவு உயர்ந்துள்ளன.
குறித்த நீர்த்தேக்கங்களின் நீரினை பயன்படுத்தி உச்ச அளவு மின் உற்பத்தி செய்து வருவதாகவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன. இதனால் மலைகளுக்கும் மண் மேடுகளுக்கும் அருகாமையில் வாழும் பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் மண் சரிவு அபாயம் காணப்பட்டால் அவ்விடங்களிலிருந்து ஒதுங்கி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதே வேளை ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் பல இடங்களில் மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன் பல இடங்களில் மண்சரிவு மற்றும் கற்கள் புரளும் அபாயமும் ஏற்பட்டுள்ளன எனவே இந்த வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக பயணிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
கே.சுந்தரலிங்கம்