ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் ‘மாகந்துரே மதூஷ்’ என்பவரின் மனைவி, தமது கணவரின் மரணம் குறித்து விசாரணை நடத்தக் கோரி, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
இதன் பிறகு ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட மாகந்துரே மதூஷின் மனைவி, பொலிஸ் காவலில் இருந்த தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ளார்.
அவர் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் அவர் மிருகத்தைப்போல வீதியில் வைத்து கொலை செய்யப்பட்டார். அப்போது,ஏனைய குற்றக்குழு உறுப்பினர்களின் மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். ஆனால் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பாக எங்களுக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் இடம்பெற்று சுமார் 5 வருடங்களாகின்றது என்றும், உரிய தரப்பினரிடமிருந்து நீதியை பெற்றுத்தருமாறு கோரி பொலிஸ் மா அதிபரை அணுகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில் சட்டத்தை அமுல்படுத்தும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.