குழந்தைகளுக்கு பால்மா பக்கட்டுகளையும் தமக்குள்ள அத்தியாவசிய பொருட்களையும் பெற்றுக்கொள்ள பெரிதும் சிரமப்படுவதாக தெரிவித்தனர்
மூன்று மாத சம்பள பணத்தை வழங்குமாறு கோரி ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நோர்வூட் பேஷன் நிறுவனத்தின் கீழ் இயங்கும் நோர்வூட் நியூவெளி கம பகுதியிலுள்ள ஆடை தொழிற்சாலையில் பணிப்புரிந்து வந்த தொழிலாளர்களுக்கு 3 மாத கால சம்பள நிலுவை பணத்தையும் ஒரு வருடத்திற்கான போனஸ் பணத்தையும் வழங்குமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆடை தொழிற்சாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் 300ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
தாம் வேலை செய்த 3 மாதகால சம்பளத்தையும் ஒரு வருடத்திற்கான போனஸ் பணத்தினையும் குறித்த ஆடை தொழிற்சாலையின் அதிகாரிகள் தங்களுக்கு வழங்காது ஆட தொழிற்சாலையையும் மூடி விட்டு சென்று விட்டார்கள் என ஊழியர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
மேலும், தமக்கான வேதனை பணத்தை வழங்காது நாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தாங்கள் வேறு ஒரு ஆடை தொழிற்சாலைக்கு தொழிலுக்கு செல்ல வேண்டுமானால் இதுவரை காலம் தாம் பணி புரிந்த ஆடை தொழிற்சாலையிலிருந்து ஊழியர் சேமலாப பத்திரத்தை வைத்துக்கொண்டு வழங்குவதற்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
குறித்த அட்டையினை தங்களுக்கு தருமாறு கூறினால், குறித்த அட்டை காணாமல் போய் விட்டதாக பொருப்பின்றி அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதேவேளை, நோர்வூட் நியூவெளி கம ஆடை தொழிற்சாலை 3 மாத காலமாக மூடப்பட்டு கிடப்பதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் இம்முறை வருகின்ற தீபாவளி பண்டிகை கொண்டாட முடியாத நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தங்களுடைய குழந்தைகளுக்கு பால்மா பக்கட்டுகளையும் தமக்குள்ள அத்தியாவசிய பொருட்களையும் பெற்றுக்கொள்ள பெரிதும் சிரமப்படுவதாக தெரிவித்தனர்.
எமது பிரச்சினை தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எமக்கான நிலுவை தொகையையும் சம்பள பணம் போனஸ் ஆகியவற்றையும் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.