முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த கோரிக்கையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்குமாறே மைத்திரி கோரிநின்றார்.
போதுமான உளவுத் தகவல்கள் கிடைத்திருந்தும், உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக் குண்டுத் தக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையை மையப்படுத்தி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் 107 பேர் 900 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி தாக்கல் செய்துள்ள வழக்கை முன்னெடுத்து செல்ல முடியாது எனவும் அவற்றை தள்ளுபடி செய்து தம்மை குற்றச் சாட்டுக்களிலிருந்து விடுவிக்குமாறும் மைத்திரிபால சிறிசேன சார்பில் முன்வைக்கப்பட்டிருந்த வாதம் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி சத்துரிகா டி அல்விஸ், குறித்த வாதத்தின் அடிப்படையிலான கோரிக்கையை நிராகரிப்பதாக நேற்று (07) அறிவித்தார்.
கடந்த 2021 நவம்பர் 29 ஆம் திகதி, குறித்த வழக்குகளை நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு அழைத்து, மைத்திரிபால சிறிசேன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா வாதங்களை முன்வைத்திருந்தார்.
இதன்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் இன்று நீதிமன்றம் தனது தீர்மானத்தை அறிவித்தது.