மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாகக் களமிறங்கக்கூடிய நபர்கள் தொடர்பில் பிரதான கட்சிகள் தீவிர கவனம் செலுத்தியுள்ளன.
ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி, 9 மாகாணங்களிலும் தேசிய மக்கள் சக்தியாக திசைக்காட்டி சின்னத்தின்கீழ் களமிறங்கவுள்ளது.
குறிப்பாக வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் முதல்வர் வேட்பாளராக யாரை களமிறங்குவது என்பது பற்றி தேசிய மக்கள் சக்தி தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.
உத்தேச முதல்வர் பட்டியலில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கபிலனின் பெயர் முன்னணியில் இருப்பதாக தெரியவருகின்றது. ஏனைய சிலரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளது.
உள்ளாட்சிசபைத் தேர்தலின்போது இவர், யாழ். மாநகர மேயர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கு முதல்வரை தெரிவுசெய்யும் பொறுப்பு அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் வடக்கு முதல்வர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு தயாரென இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ, சுமந்திரன் அறிவித்துள்ளார்.