வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் படத்துக்கு ‘நீலி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். 2400 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தை உதயா கிரியேஷன்ஸ் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கிறார். இதில் நட்டி என்ற நட்ராஜ் சுப்ரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார். ‘நீங்காத எண்ணம்’, ‘மேல்நாட்டு மருமகன்’ ஆகிய படங்களை இயக்கிய எம்எஸ்எஸ் இயக்குகிறார்.
அவர் கூறும்போது, “அமானுஷ்ய படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். இது வரலாற்றுப் பின்னணியில் உருவாக இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு. நீலி சம்பந்தமான நிறைய வரலாற்று விஷயங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு கொஞ்சம் கற்பனை கலந்து இக்கதையை உருவாக்கி இருக்கிறோம்.
இதன் கதையைக் கேட்டதுமே பிடித்துப்போய் உடனே நடிக்க ஒப்புக் கொண்டார், நட்டி. 2 முக்கிய நாயகிகள் நடிக்கிறார்கள். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிப்போம்” என்றார்.