மோசமான ஆட்சியாளர்களால், வாழ்வதற்கு பொருத்தமில்லாத நாடாக இலங்கை மாறியுள்ளதாக, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியுள்ளார்.
” நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காகவும், வாழ்வாதாரத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவசரகாலச்சட்டம் அமுல்படுத்தப்படவில்லை. மாறாக, மக்களால் வெறுக்கப்படும் ஊழல், மோசடியான அரசியல்வாதிகளை பாதுகாப்பதற்காகவே அவசரகாலச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது
மோசடியான ஆட்சியாளர்கள் செய்த வேலைகளால், வாழ்வதற்கு தகுதியற்ற நாடாக இலங்கை மாறியுள்ளது. வாழ்க்கைச் செலவு மக்களால் சுமக்க முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது. எரிபொருள் மற்றும் எரிவாயுக்கான நெருக்கடிகள் தொடர்கின்றன.
அதிகரித்த வாழ்க்கைச் செலவினால் வாழ முடியாத நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர்.
மக்களை வன்முறையாளர்கள், கலவரக்காரர்கள் எனப் பெயர் சூட்டுவது முற்றிலும் தவறானது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்தபோது நெருக்கடி நிலை மூன்று வாரங்களுக்கே நீடிக்கும் என குறிப்பிட்டார். தற்போது நெருக்கடி நிலை ஒருவருட காலத்திற்கு நீடிக்கும் என குறிப்பிடுகின்றார்.
மக்களின் போராட்டத்தை அலட்சியப்படுத்த வேண்டாம். அரசுக்கு எதிரான போராட்டம் காலி முகத்திடலுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டது என கருதக் கூடாது. நாட்டின் 22 இலட்சம் மக்களும் போராட்டத்தில்தான் உள்ளார்கள்.என்பதை ஜனாதிபதி தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
69 லட்சம் மக்களின் வாக்குகளை பெற்ற ஜனாதிபதியை மக்கள் போராட்டம் புறக்கணித்துள்ளது.
மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் மக்கள் போராட்டம் வெகுவிரைவில் புறக்கணிக்கும்.
மக்கள் போராட்டம் நியாயமானது.இலங்கை இராணுவத்தினருக்கு தனித்த புகழ் உள்ளது. ஊழல் ஆட்சியாளர்களை பாதுகாப்பதற்காக மக்களுக்கு எதிராகச்சென்று அதனை இல்லாதொழித்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில் 22 இலட்ச மக்களும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். எதிர்வரும் மாதம் 09 ஆம் ஆம் திகதி நாட்டு மக்கள் அனைவரும் கொழும்பில் ஒன்றினைந்து போராட்டத்தை பலப்படுத்த வேண்டும்.” – எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.