முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை நீக்குவதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது தங்கியிருக்கும் விஜேராமவை விட தனது சொந்த ஊரான மெதமுலன சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் சலுகைகளை நீக்கியதன் மூலம் அரசாங்கத்தின் நோக்கம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச, அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் அவ்வாறு செய்வதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை ரத்து செய்வதற்கான சட்டமூலம் கடந்த 31ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின்படி, முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை ரத்து செய்வதற்கான 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் எண் ஜனாதிபதி உரிமைச் சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை ஜூன் 16 அன்று ஒப்புதல் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.