“விமர்சனங்களை விட தீர்வு திட்டங்களே காலத்தின் தேவையாக உள்ளது.” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பாக அவர் மேலும் பின்வருமாறு கூறினார்,நாட்டின் வறுமை நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நகரம் கிராமம் மற்றும் பெருந்தோட்ட பகுதி என பாகுபடுத்தி பார்க்கின்ற போது, பெருந்தோட்ட பகுதிகளின் வறுமை நிலை உக்கிரம் அடைந்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் விமர்சனங்களை விட தீர்வு திட்டங்களே காலத்தின் தேவையாக உள்ளது. இன்று நாட்டில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் உணவு பற்றாக்குறை பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பாக மலையக பெருந்தோட்ட பகுதிகளில் இந்நிலைமை இரண்டில் ஒரு பகுதியினராக உள்ளது. உணவு பற்றாக்குறை மற்றும் மந்த போசன நிலைமை மலையக பெருந்தோட்ட பகுதிகளில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலைமையின் தொடர்ச்சியான தன்மை பாரிய சமூக பிரச்சினையை தோற்றுவிக்கக்கூடிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கின்றது.
முழு நாட்டிலும் ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறை பிரச்சினையை விட அதிகமான தாக்கம் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ளது. பாடசாலை மாணவர்களின் வருகையிலும் இத்தாக்கத்தை காண முடிகின்றது. இப் பிரச்சினையை நாம் மூடி மறைத்துக்கொண்டிருக்க முடியாது. இன்று தீரும் நாளை தீரும் என காலத்தை இழுத்தடிக்க முடியாது. ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டி விமர்சனம் செய்வதால் தீர்வு கிடைக்கப்போவதில்லை.
தற்போது ஜனாதிபதி முன்வைத்திருக்கும் உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு அப்பால் சென்ற மலையக பிரதேசத்திற்கான விசேட திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும். அதற்கான அரச மட்ட பொறிமுறையொன்று ஏற்படுத்த வேண்டும். ஆளும்கட்சி எதிர்க்கட்சி என்று அல்லாது இவ்வேலை திட்டத்தில் அரசு முன்வைக்கும் சாதகமான விடயங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும். அதன் போது மட்டுமே இப்பிரச்சினைக்கு தீர்வொன்றை தேடிக்கொள்ள முடியும். அவ்வாறில்லாது அரசாங்கத்தை மட்டும் குறைக்கூறி விமர்சனம் செய்வதால் எவ்வித தீர்வும் மக்களுக்கு கிடைக்கப்போவதில்லை.