வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு!

0
184

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக செல்ல காத்திருக்கும் மக்களுக்கு அவசர அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது.நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு செல்வதுடன், பலர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல தயாராக உள்ளனர்.

இந்த சூழ்நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை வழங்குவதாகக் கூறி மோசடியாகப் பணம் பெறும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் தொடர்பாக பல தகவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்குக் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரேனும் நபருக்கு அல்லது ஏஜன்சி நிறுவனத்திற்கு வெளிநாடு செல்வதற்காகக் கடவுச்சீட்டை அல்லது பணத்தை வழங்குவதற்கு முன் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் இணையத்தளத்தில் பிரவேசித்து அல்லது 1989 என்ற உடனடித் தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொண்டு குறித்த வெளிநாட்டு முகவர் நிறுவனம் சட்ட ரீதியாக பதிவுசெய்யப்பட்டதா என உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பணியகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் அம்பாறை மற்றும் கல்முனை நகரங்களை மையமாகக் கொண்டு அனுமதிப் பத்திரமின்றி செயற்படும் சுயதொழில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களை சுற்றி வளைத்து இரண்டு நபர்களை அண்மையில் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

எனவே இவ்வாறான விடயங்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும், விரைவில் வெளிநாடு செல்ல வேண்டும் என்பதற்காக மோசடிக்காரர்களின் வலையில் சிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here