அரச அலுவலகங்களை வெள்ளிக்கிழமைகளில் மூடுவது தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து நெருக்கடி காரணமாக வெள்ளிக்கிழமையை அரச அலுவலகங்களுக்கான விடுமுறை தினமாக அறிவித்து பொதுநிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டது.
எனினும், தற்போது பொதுப்போக்குவரத்து படிப்படியாக வழமைக்கு திரும்பி வருகிறது.
போக்குவரத்திலிருந்து விலகியிருந்த 800 பேருந்துகள் இலங்கை போக்குவரத்து சபை மீள சேவையில் இணைத்துள்ளது.
அத்துடன் QR முறைமையின் கீழ் எரிபொருள் வழங்கப்படுகிறது.
எனவே, இந்த விடயங்களை கருத்திற்கொண்டு, பொதுநிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்யுமாறு பொதுநிர்வாக அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் வாரம் முதல் வெள்ளிக்கிழமைகளில் அரச அலுவலகங்கள் வழமைபோல இயங்கும் என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.




