டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம வெஸ்ட் தோட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து பல வீடுகள் வெள்ளத்திற்கும் மண்சரிவிற்கும் உள்ளாகின.
இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மா, சீனி, பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொடுக்க டயகம பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி யு.ஆர்.எஸ்.கே. குணதிலக நடவடிக்கை எடுத்திருந்தார்.
தற்போது தோட்டங்களில் வாழும் மக்கள் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளர்.வறுமை நிலையில் வாழும் தொழிலாளர்கள் பலர் தங்களுடைய அன்றாட ஜீவனோபாயத்தினை கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலேயே காணப்படுகின்றனர்.
இவ்வாறான நிலையில் அதிகமான பொலிஸ் நிலையங்கள் பொலிஸார் உங்கள் நண்பன் என பெயர்ப்பலகை பதிக்கப்பட்டிருந்த போதிலும் தங்களது கடமைகளுக்கு அப்பால் ஒருசில பொலிஸ் நிலையங்களே அப்பிரதேசத்தில் வாழும் மக்களின் நண்பனாக இருந்து செயற்படுகின்றனர். அந்த வகையில் குறித்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கொழும்பு பகுதியிலுள்ள வர்த்தகர்களிடம் தொடர்புகொண்டு குறித்த நிவாரணப் பொருட்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருந்தமை மிகவும் வரவேற்கத்தக்கது என பலரும் பாராட்டுகின்றனர்
இதற்கான அனுசரணையினை கொழும்பு ஸ்ரீ கதிரேசன் வீதியில் வர்த்தகரான எஸ்.யோகா என்பவர் இதற்கான அனுசரணையினை வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வுக்கு டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யு.ஆர்.எஸ்.கே. குணதிலக மற்றும் வர்த்தகர் எஸ்.யோகா, உதவி பொலிஸ் பரிசோதகரகள்; , பொலிஸ் உத்தியோகத்தர்கள்,; கிராம சேவகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கே.சுந்தரலிங்கம்;