நாட்டுக்குள் சட்டவிரோதமாக சொகுசு மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளரை பிணையில் விடுதலை செய்யுமாறு அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (30) காலை உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளரை 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டுக்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 200 மில்லியன் ரூபாவுக்கு அதிக பெறுமதியான 21 மோட்டார் சைக்கிள்கள் அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் வைத்து ஜூலை 12 ஆம் திகதி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபரான அம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளர் ஜூலை 17 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.