கனடாவின் பிராம்ப்டன் (Brampton) நகரில், முதியவர்களை இலக்கு வைத்து 1.4 மில்லியன் டொலர் ($1,465,000) நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் 62 வயது நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த போன்சி (Ponzi) முதலீட்டு மோசடி குறித்து பொலிஸார் நடத்திய விசாரணையில் பின்வரும் விபரங்கள் தெரியவந்துள்ளன.
நவ்தீப் போபராய் (Navdeep Boparai) மற்றும் அவரது பிஎல்எம் கனடா கார்ப்பரேஷன் (BLM Canada Corporation) நிறுவனத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
அவர் ஒரு வெற்றிகரமான மார்ட்கேஜ் புரோக்கர் (Mortgage broker) என நம்ப வைக்கப்பட்டுள்ளார்.
தனிநபர் மார்ட்கேஜ், காண்டோமினியம் (Condominium) கட்டுமானம் மற்றும் சட்டப்பூர்வ அறக்கட்டளைகளில் பணம் முதலீடு செய்யப்பட்டு, லாபம் நிச்சயம் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
புதிய முதலீட்டாளர்களின் பணத்தைக் கொண்டு, பழைய முதலீட்டாளர்களுக்கு இலாபம் தருவது போல் காட்டி இந்த போன்சி ஏமாற்று வேலை அரங்கேறியுள்ளது.
இந்த மோசடி தொடர்பாக நவ்தீப் போபராய் (Navdeep Boparai) என்பவர் மே 26 அன்று கைது செய்யப்பட்டார்.
அவர் மீது மோசடி, சட்டவிரோத சொத்துக்களை வைத்திருத்தல் மற்றும் பணமோசடி உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் ஜூன் 29 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
இந்த மோசடியில் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
பொதுமக்கள் அவசரப்பட்டு முதலீடுகளைச் செய்ய வேண்டாம் என்றும், முதலீட்டு நிறுவனங்களின் பின்னணியை முழுமையாகச் சரிபார்க்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.




