லிந்துலை மெராயா பகுதியில் வெள்ளம் – 25 குடும்பங்கள் பாதிப்பு

0
214

வானிலை சீற்றத்தினால் கடந்த தினங்களாக மலையக பிரதேசங்களில் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றும் வீசப்பட்டு வருகின்றது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கடந்த தினங்களாக பிற்பகல் வேளைகளில் இடைவிடாது பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் சிறு சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.லிந்துலை மெராயா பகுதியில் வெள்ள நீர் பெருக்கத்தால் விவசாய நிலங்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது.மழை காரணமாக இப்பகுதியில் 25 வீடுகள் வெள்ள நீரினால் நிரம்பியதுடன், மேலும் சில வீடுகளுக்கு சிறிதளவு வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.

வீட்டிற்கு அருகில் உள்ள மேல்கொத்மலை நீர்தேகத்திற்கு நீர் வழங்கும் எல்ஜீன் ஆற்றில் நீரின் மட்டம் அதிகரித்தால் வெள்ள நீர் வீட்டினுள் புகுந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

தமது வீட்டில் ஒரு அறையேனும் இல்லாமல் வீடு முழுவதும் வெள்ள நீராக காணப்படுவதாகவும், தமது அலுமாரியில் வைத்திருந்த பொருட்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் என பல பொருட்கள் வெள்ள நீரில் சேதமாகியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டனர்.

பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களை சேர்ந்த சுமார் 60ற்கும் மேற்பட்டோர் உறவினர்கள் வீடுகளிலும், அயலவர்களின் வீடுகளிலும் தங்க வைக்கப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

டயகம பிரதேசத்திலிருந்து வரும் ஆகர ஆறு பெருக்கம் எடுத்ததனால் டயகம, அக்கரப்பத்தனை, மன்றாசி, திஸ்பனை, ஆகரகந்தை, நாகசேனை, லிந்துலை போன்ற ஆற்றோர பிரதேசங்கள் நீரினால் மூழ்கியுள்ளது. இதனால் இப்பிரதேசங்களில் விவசாய காணிகள் முற்றாக பாதிப்படைந்துள்ளதுடன், தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கும் ஆற்று நீர் உட்புகுந்துள்ளமை குறிப்பிடதக்கது.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here