பாராளுமன்ற அமர்வுகளின் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு உரிய வகையில் சந்தர்ப்பம் வழங்கப்படாவிட்டால் பாராளுமன்ற நடவடிக்கைகள் குறி்த்து கடுமையான நடவடிக்கை எடுப்போம் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்த அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், இன்று (2025.06.17) பாராளுமன்றம் கூடிய வேளையில் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக அவர்கள் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் உருவாகியுள்ள யுத்த சூழ்நிலையின் போது எமது நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய முக்கிய பிரச்சினைகள் சிலவற்றை பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதற்காக சபாநாயகரிடம் நேரம் கேட்டிருந்தார், ஆனால் வழக்கம்போல சபாநாயகர் அந்த கோரிக்கைக்கு வாய்ப்பு வழங்கவில்லை.
இந்த நெருக்கடிச் சூழலில் இஸ்ரேலில் வசிக்கும் 20,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மற்றும் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் ஈரானின் தேயிலை ஏற்றுமதிக்கும் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, அதேபோல் உலக அமைதிக்கு கடுமையான பாதிப்பை ஏற்பட்டுதக் கூடிய. நிலைமையும் உருவாகியுள்ளது, இந்த நிலைமை குறித்து அரசாங்கத்தின் பதிலை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டும் என்பது எதிர்க்கட்சியின் அனைத்து கட்சிகளின் கருத்தாக இருந்தது.
ஆனால், கௌரவ சபாநாயகர் அதற்கு வாய்ப்பு வழங்குவதை தொடர்ந்து மறுத்தபோது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேசுவதற்கு உள்ள உரிமை இதன்மூலம் மீறப்படுகிறது என்று சுட்டிக்காட்டினர்.
10வது பாராளுமன்றத்தில் தற்போதைய சபாநாயகரின் இவ்வாறான தொடர் நடவடிக்கை சாதாரண விடயமாக மாறிவிட்டது என்று இங்கு கருத்து தெரிவித்த உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். சபாநாயகர் அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான் அவர்களுக்கு கருத்துக்களை வெளியிடுவதற்கு வாய்ப்புகளை வழங்கி செயற்படுவதும், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் அவர்களுக்கு கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பு வழங்காததும் பாராளுமன்ற மரபுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சியின் பிரதி முதற்கோலாசான் அஜித் பி. பெரேரா அவர்கள் சுட்டிக்காட்டினார்.
தேசிய அளவில் முக்கியமான பிரச்சினையை பாராளுமன்றத்தில் முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படாவிட்டால் பாராளுமன்ற நடவடிக்கைகளில் எதிர்க்கட்சியின் பங்களிப்பு குறித்து கடுமையான முடிவு எடுக்க வேண்டியிருக்கும் என்று அறிவித்த எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர் குழு இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகியதுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்காக அனைத்து உறுப்பினர்களும் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.