நிர்வாண நிலையில் 16 வயது சிறுமி ஒருவரின் சடலம் நேற்றையதினம்(6) கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் களுத்துறை தெற்கு – காலி வீதியில் உள்ள விடுதி ஒன்றின் பின்புறம் உள்ள தொடருந்து மார்கத்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுமி களுத்துறை – நாகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சிறுமி நேற்றையதினம் இன்னுமொரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடன் குறித்த விடுதிக்கு சென்று, அவர்கள் விடுதியில் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்துள்ளனர்.
பின்னர் ஒரு பெண்ணும், ஒரு ஆணும் விடுதியை விட்டு வெளியேறியுள்ளதுடன், அதன் பின்னர் சிறுமியுடன் இருந்த மற்றைய நபரும் வெளியேறியுள்ளமை காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர், விடுதிக்கு பின்னால் உள்ள தொடருந்து பாதைக்கு அருகில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் கூறினார்.
சந்தேகத்தின் அடிப்படையில் சிறுமியுடன் விடுதிக்கு சென்ற மற்றைய ஆணும், பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த சிறுமியுடன் இருந்த நபரைக் கண்டுபிடிப்பதற்கு விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் களுத்துறை தெற்கு காவல்துறையினர் பல கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.