ஈரானின் அணு ஆயுத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து அந்த நாட்டின் மீது கடந்த 28-ந்தேதி திடீரென போர் தொடுத்தன.
இதில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து ஈரானும் ஆவேசமாக பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது.
இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி அசரடித்து வரும் அந்த நாடு, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களையும் தாக்கி வருகிறது. வளைகுடா பிராந்தியம் முழுவதும் நீடித்து வரும் இந்த போர் இன்று 7-வது நாளை எட்டி உள்ளது. இருதரப்பும் எவ்வித இடைவெளியும் இல்லாமல் ஒன்றையொன்று தாக்கி வருகின்றன.
இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களால் அந்த பகுதியில் 90 சதவீத கப்பல் போக்குவரத்து முடங்கி இருக்கிறது. நாளுக்கு நாள் இதுகுறித்த நெருக்கடி அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரக்கூடும் என்ற கவலைகள் அதிகரித்துள்ளன. உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் அதிகரிப்பு அதிகமாக உள்ளது.
இருந்தபோதிலும், இந்திய நகரங்களில் எரிபொருள் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் இருக்கிறது. ஆனால் பெட்ரோல், டீசல், கியாஸ் உள்ளிட்ட எரிபொருள் விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்ப டுகிறது. இதுகுறித்த செய்திகள் பரவலாகி வருகிறது.
இந்நிலையில் வளைகுடாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல் பாதைகளை ஈரான் தடுத்துள்ள நிலையில், இந்தியா தனது எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதற்கு அமெரிக்கா 30 நாள் விலக்கு அளித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறுகையில், “ஜனாதிபதி டிரம்பின் எரிசக்தி நிகழ்ச்சி நிரலின் விளைவாக எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி இதுவரை பதிவு செய்யப்படாத மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளது. உலக சந்தையில் எண்ணெய் தொடர்ந்து பாய உதவும் வகையில், இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷிய எண்ணெயை வாங்குவதற்கு நிதித்துறை தற்காலிகமாக 30 நாட்களுக்கு அனுமதி அளிக்கிறது. இந்த குறுகிய கால நடவடிக்கை ரஷிய அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க நிதி நன்மையை வழங்காது, ஏனெனில் அது ஏற்கனவே கடலில் சிக்கித் தவிக்கும் எண்ணெய் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளை மட்டுமே அங்கீகரிக்கிறது.
இந்தியா அமெரிக்காவின் முக்கியமான பங்காளியாகும், மேலும் அமெரிக்க எண்ணெய் கொள்முதலை இந்தியா அதிகரிக்கும் என்று நாங்கள் முழுமையாக எதிர்பார்க்கிறோம். இந்த இடைநிறுத்த நடவடிக்கை உலகளாவிய எரிசக்தி பணயக்கைதியாக ஈரானின் முயற்சியால் ஏற்படும் அழுத்தத்தை தணிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா தனது எண்ணெய் இறக்குமதியில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தை வளைகுடா பகுதியிலிருந்து பெறுகிறது, இதில் குறிப்பிடத்தக்க பகுதி மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இந்தியா தனது எரிசக்தி நிலைமையை ஒரு நாளைக்கு இரண்டு முறை மதிப்பாய்வு செய்து வருகிறது, மேலும் இந்திய அரசாங்கம், எரிபொருள் இருப்பு மற்றும் வினியோகத்தில் தாராளமயத்தில் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




