3BHK எப்படியிருக்கும் நடிகர் சித்தார்த் விளக்கம்

0
12

ரொம்ப எமோஷனலான ஒரு வாழ்க்கையின் குறுக்கு வெட்டுத் தோற்றம் ‘3BHK.’ ‘கடைசியில் எந்தப் படத்தில் ஒரு முழுக் குடும்பத்தைப் பார்த்து ரசித்தீர்கள்’ என என்னிடம் கேட்டார்கள்.

சித்தார்த்துடன் பேசுவது சுவாரஸ்யம் தரும் அனுபவம். இந்திய சினிமாவின் நல்ல அம்சங்களில் எப்போதும் கரம் கோக்கத் துடிக்கும் அனுபவத் தேர்ச்சியோடு புன்னகைக்கிறார். அடுத்து ‘3BHK’
ரிலீஸுக்குக் காத்திருக்கிறது.

‘‘உண்மையில் பயமாயிருக்கு. இந்த இடத்தைக் கொடுத்த ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். எனக்குக் கொடுத்திருக்கும் இடம் பெரியது. ‘சித்தா’வின்போது எல்லோரும் வித்தியாசம் பார்க்காமல் அங்கீகரித்தார்கள். ஒவ்வொரு படமும் செய்யும்போது நடிப்பில் அடுத்த கட்டத்திற்குப் போகணும் என்று நினைப்பேன்.

நிச்சயம் என்னை மெருகேற்றியே வந்திருக்கிறேன். இப்ப வரைக்கும் என் தகுதி முதலில் நல்ல ரசிகன் என்பதில்தான் போய் நிற்கும். ஒவ்வொரு படத்தையும் நான் தீவிரமாக எடுத்துக்கொள்வேன். இந்த மண்ணில் நடக்கிற கதையாக இருக்கணும். அதன் அனுபவச் சாயலை எல்லோரும் உணர்ந்திருக்கணும். ‘3BHK’ அது மாதிரியான படம்” – பக்குவமாகப் பேச ஆரம்பிக்கிறார் நடிகர் சித்தார்த். தமிழ் சினிமாவின் நம்பகமான நடிகர்.

‘3BHK’ படத்திற்குள் வந்தது எப்படி?’’

‘‘டைரக்டர் ஸ்ரீகணேஷின் ‘8 தோட்டாக்கள்’ பார்த்து வியந்து போயிருக்கிறேன். எப்போது பார்த்தாலும் ஃபிரஷ்ஷாக இருக்கும் படம். திறமையான ரைட்டர். அவருடன் முன்னாடியே படம் செய்யணும்னு நினைச்சிருக்கேன். தயாரிப்பாளர் அருண் விஷ்வா, ‘ஸ்ரீயோடு சேர்ந்து படம் செய்யலாம்’ என்றபோது அது எனக்கும் உவப்பானதாக இருந்தது.

‘என்னிடம் இரண்டு கதை இருக்கிறது. அதில் ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன்’ எனச் சொன்னதுதான் ‘3BHK.’ எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. ஒரே வாரத்தில் புராஜெக்ட் ஒரு வடிவத்திற்குள் வந்து, இதோ படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்குத் தயாராகி நிற்கிறது. சில சமயம் சில விஷயங்கள் நாம் ஆச்சர்யப்பட்ட மாதிரியே பளிச்சுன்னு நிக்கும்ல, அப்படியான படம் இது.”

“இந்தப் படம் ஒரு மிடில் கிளாஸ் மக்களின் கனவைச் சொல்வது மாதிரி இருக்கிறது. இதன் உள்ளே வந்து இறங்குவதற்கு உங்களைத் தூண்டிய விஷயங்கள் என்னென்ன?’’

‘‘வீட்டின் உறுப்பினர்களை அறிமுகம் செய்வது மாதிரி டீசர் ஒன்று வெளிவந்தது. அதுதான் ரொம்பவும் பிடித்தது. வீடு கட்டுவது எல்லோருக்கும் பெரும் கனவு. வீட்டில் இருக்கிற அத்தனை பேரும் சேர்ந்து எதிர்பார்க்கிற ஒரு கனவு. குழந்தைகளின் கண்ணெதிரே, ‘நமக்கு சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும்’ என அப்பா அம்மா விரும்புவார்கள். வயசு ஏற ஏற, ‘சொந்த வீடு வாங்கலையா?’ என்ற கேள்வி நம்மைப் பின்தொடர்ந்துகிட்டே இருக்கும்.

ஸ்ரீ கதை சொல்கிற விதமும், ரியல் லைஃப்பில் நம் வாழ்க்கை இருக்கிற விதமும் ஒன்றுதான். இந்த மொத்த வாழ்க்கையையும் அவர் பாசிட்டிவாகத்தான் பார்ப்பார். ஸ்ரீகணேஷ் ஒரு கேங்ஸ்டர், சைக்கோ, மர்டர் மிஸ்டரி படம் டைரக்ட் செய்தால் எப்படியிருக்கும் என நாங்கள் சிரித்துப் பேசியிருக்கோம். கதை சொல்வதைக்கூட சிரித்துக்கொண்டே சொல்வார். எல்லா வார்த்தைகளையும் பேசி முடிக்கும்போது சிரிப்புதான். அந்தச் சிரிப்பை அவர்தான் சிரிக்க முடியும். ஒரு நல்ல குடும்பத்தின் உறவுகளை, அதன் அழகை, அருமையாக திரையில் வெளிப்படுத்தியிருக்கார்.

நன்றாக உழைக்கிறவர்களை, மக்களை நேசத்துடன் அணுகுகிறவர்களை, சாமி நம்மை எப்போதும் கைவிடாது என மாறாத நம்பிக்கை யுடையவர்களை, யாரையும் குற்றம் குறை சொல்லாமல் தினமும் உறங்குகிற மக்களை, காலையில் கண் விழிக்கும் போது யாருக்கும் கெடுதல் நினைக்காத ‘தன் வேலையுண்டு, உழைப்புண்டு, தன் கனவுகள் உண்டு’ என இருக்கிற மக்களை ஒரு குடும்பத்தில் பிணைத்து, அதன் goodness-ஐ படமாக்கியுள்ளார்.

அதுதான் எல்லோருக்கும் குளுக்கோஸ் மாதிரி. தான் எதிர்பார்க்கிற ஆக்‌ஷன், உண்மை, அழுத்தம் போன்றவற்றைக் கொண்டு வருவதில் ஸ்ரீகணேஷ் தெளிவாக இருந்தார். பேசுவதற்குத்தான் அவர் குழந்தை மாதிரி. வேண்டியதைக் கேட்பதில் விஸ்வரூபம் எடுத்தார். He is directing from the heart.”

“நடிகர்கள் தேர்வு கச்சிதமாக அமைந்திருக்கிறது!’’

‘‘ரொம்ப எமோஷனலான ஒரு வாழ்க்கையின் குறுக்கு வெட்டுத் தோற்றம் ‘3BHK.’ ‘கடைசியில் எந்தப் படத்தில் ஒரு முழுக் குடும்பத்தைப் பார்த்து ரசித்தீர்கள்’ என என்னிடம் கேட்டார்கள்.

உடனே ஒரு பெயரும் எனக்கு ஞாபகம் வரவில்லை. அப்படி ஒரு casting செய்ய வேண்டும் என இயக்குநரும் தயாரிப்பாளரும் பேசிக் கொண்டார்கள். அப்படி வந்தவர்கள்தான் சரத் சாரும், தேவயானி மேடமும். யாரும் இப்போது நினைத்துப் பார்க்க முடியாமல் ‘சூரியவம்சம்’ ஜோடி அப்படியே இதற்கும் பொருந்தி வந்துவிட்டது.

அவர்களின் பெரிய அனுபவத்தில் கேரக்டரை உள்வாங்கி நடிக்கிற விதம் அழகு. அதுதான் இந்தப் படத்தோட ஹைலைட் ஆகவும் இருக்கிறது. சைத்ராதான் எனக்கு ஜோடி. நானும் மீதாவும் அண்ணன் தங்கையாக நடித்திருக்கிறோம். ஒரு குடும்பத்தோடு சேர்ந்து டிராவல் செய்கிற மாதிரி இருக்கும். எழுத்தில் பார்த்த உண்மை, மென்மை, பாசிட்டிவ் எல்லாவற்றையும் சிரமேற்கொண்டு செய்திருக்கோம்.

எழுதின கேரக்டரையும், நடிக்க வந்த நடிகர்களையும் ஸ்ரீ எப்பவும் ஒன்றாக இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்வார். பிரபு, வாசுதேவன், சாந்தி, ஆர்த்தியாக நாங்கள் நிலை நின்று இருப்பது எனக்குப் புரிந்தது.”

“உங்க கேரக்டர் பிரபு எப்படி இருப்பார்?’’

‘‘அவன் உழைக்கத் தெரிந்தவன். அப்பாவை ரொம்பவும் பிடிக்கும். அப்பாவுக்குப் பிடித்த மாதிரி நாம் வளர்ந்து ஜெயித்து பெயர் வாங்கணும்னு நினைப்பான். எனக்கு இந்த செட்டில் இருந்தபோது வீட்டில் இருந்த மாதிரியே இருந்தது. பிரபு நினைத்தபடி பெயர் வாங்குகிறானா என்பதை திரையில் பார்க்கலாம். வேடிக்கை என்னன்னா, இதற்கு முன்னர் எனக்கென ஒரு சொந்த வீடு இருந்ததேயில்லை. நான் பத்து வயதாக இருக்கும்போது, அப்பா அம்மாவின் வீட்டுக்கான கனவை கூட இருந்து பார்த்திருக்கேன்.

அப்புறம் இல்லாத கடனையெல்லாம் வாங்கி அப்பா வீடு கட்டினார். அந்த செங்கல் ஒவ்வொன்றிலும் அப்பா அம்மாவின் கனவைப் பார்த்திருக்கேன். கடைசியில் சென்னையில் வீடு கட்டினார்கள்.

இதுவரைக்கும் நான் எனக்கான வீடு வாங்காமல் இருந்து கல்யாணத்திற்கு பிறகு ‘3BHK’வில் நடிக்க ஆரம்பித்த சமயத்தில்தான் வீடு வாங்கியிருக்கேன். இந்த வீட்டோடு சேர்த்து ‘3BHK’ அமைந்தது எனக்கு எப்பவும் நினைவில் இருக்கும்.

”மியூசிக் அம்ரித் ரொம்பவும் புதிதாக இருக்கிறது?’’

‘‘எனக்கு இதற்கு முன்னர் விஷால் சந்திரசேகர் போன்று திறமையான புதுமையான இசையமைப்பாளர்கள் அமைந்திருக்காங்க. இப்போது அம்ரித் புதிதான திறமைகளோடு இருக்கார். அவர் இந்தப் படத்திற்கு வருவது எனக்கு அமைந்திருக்கிறது. கர்நாடக இசைப் பாடகர் பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் மகன்வேறு! அவங்ககிட்டே இருந்து வந்த திறமையெல்லாம் அம்ரித்கிட்டே அசாதாரணமாக இருக்கு. அவரது ட்யூனும் மியூசிக்கும் எளிமையாகவும் அரவணைப்பாகவும் உயிர்த்தன்மையுடனும் இருக்கிறது. தினேஷ் கிருஷ்ணன், ஜித்தின் ஒளிப்பதிவு சிறப்பாக வந்திருக்கிறது.

”படம் இயக்குவது உங்கள் இன்னுமொரு கனவு இல்லையா?’’

‘‘ஒரு படம் செய்து அதை மணிரத்னம் சாரிடமும் கமல்ஹாசன் சாரிடம் போட்டுக் காட்ட வேண்டும் என்று நினைத்திருந்தேன். இயக்குநர் ஆவதற்காக வந்தவன் நடிகன் ஆகிவிட்டேன். இப்பொழுது உடனே படம் இயக்குவது என் கையில் இல்லை. இன்னமும் அது கனவாகவே இருக்கிறது. எப்போது அது நடக்கும் என்று தெரியவில்லை. ஆனால் அந்தக் கனவிலிருந்து பின்வாங்காமல் இருக்கிறேன்.”

40 படங்களில் ஹீரோவாக நிலைத்திருப்பதில் எந்த அளவு திருப்தி இருக்கிறது?

‘‘ஐந்து வருஷத்திற்கு ஒரு தடவை நாம் மாறிக்கொண்டே இருக்கோம். எனக்கு இதில் அன்பு, மரியாதை எல்லாம் கிடைத்திருக்கிறது. இவ்வளவு தூரம் வந்திருக்கிறது சந்தோஷம்தான். இன்னமும் இந்தப் பிரயாணம் எங்கே கூட்டிக் கொண்டு போகும் என்று தெரியாது. எனக்கு ஒவ்வொரு படமும் அன்று புதிதாகத் தொடங்குவது மாதிரிதான் இருக்கிறது. ஒவ்வொரு படத்திலும் டைரக்டரையும் ரைட்டரையும் சந்தோஷப்படுத்தணும்னு ரொம்பவும் மனப்பூர்வமாக நினைத்திருக்கிறேன். ஒவ்வொரு படத்துக்கும் அதன் கதை கோருவதைப் புரிந்துகொண்டு இன்னும் சரியாகச் செய்ய முயல்கிறேன்.

25, 40 என்பதெல்லாம் மைல்கல்தான். போக வேண்டிய தூரம் இருக்கிறது. ஒவ்வொரு சினிமாவிலும் மக்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். உண்மையிலேயே சினிமாவில் நடிப்பது பிடித்த வேலை என்பதால் செய்கிறேன். இப்படிப் பெருவாரியான மக்களின் அன்பைப் பெற முடிவதும் இதில்தான் எனக்கு கிடைத்திருக்கிறது. அக்கா பெரிய படிப்பெல்லாம் படித்து வெளிநாட்டில் பொலிட்டிக்கல் சயின்ஸ் புரொபஸரா இருக்காங்க. அவர்களால் அப்பா அம்மாவோடு இருக்க முடிய வில்லை.

நடித்துக்கொண்டு, அருமையான, புரிந்து கொண்ட மனைவியோடு வாழ்ந்து கொண்டு, அப்பா, அம்மாவை அரவணைத்துக் கொண்டே இருக்கிறேன். அப்படிப் பார்த்தாலும் நான் லக்கிதான். சின்ன வயதிலிருந்து வந்த சினிமா ஆர்வத்தையும் விடவேயில்லை. அப்பா அம்மாவோடு இவ்வளவு நேரம் செலவழிக்கிறது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கு. அவர்கள் கொடுத்த வாழ்க்கையைத்தான் நான் வாழ்ந்துகொண்டே இருக்கிறேன். என் கலை, இயல்பு எல்லாமே எனக்கு அவர்களே சொல்லிக்கொடுத்தார்கள்.”

“காதல் மனைவி அதிதியோடு வாழ்க்கை எப்படியிருக்கு?’’

‘‘இப்பதானே ஆரம்பிச்சிருக்கோம். அதை அவங்க கிட்டே கேட்கணும். இரண்டு பேரும் சேர்ந்து கண்ட கனவை ஞாபகப்படுத்திக்கிட்டே இருப்பார்கள். எனக்கான மனசாட்சியாகவும் அடித்தளமாகவும் எனக்காகப் போராடுகிறவராகவும் அவர் இருக்கிறார். அதிதியை எனக்கு அமைந்த வரமாகப் பார்க்கிறேன்.”

நன்றி – Kokuvil Junction FB Fage 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here