இந்தியா-கேரள மாநிலம் திருவனந்தபுரம், தளவபுரம் வர்கலா நகரிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 8 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் பிரதாபன் (62) அவரது மனைவி செர்லி (54), மூத்த மகன் அகில் (26), மருமகள் அபிராமி (24) மற்றும் அவர்களது 8 மாத ஆண் குழந்தை ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் தங்களுக்கு சொந்தமான வீட்டில் இரண்டாவது மாடியில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 1.45 அளவில் குறித்த வீட்டில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதனை அவதானித்த அப்பகுதி பொதுமக்கள், தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்பு பிரிவினர், உடல் கருகி உயிரிழந்த 5 பேரின் சடலங்களை மீட்டனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மற்றும் தடயவியல் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வில் மின் கசிவு எதுவும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த வீடு தீப்பற்றி எரிய ஆரம்பித்த வேளையில் அவ்வீட்டின் அருகே இருந்து 5 மோட்டர் சைக்கிள்கள் வேகமாக சென்றதாக நேரில் கண்ட சாட்சியாளர் சிலர் தெரிவித்ததாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால், இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது