டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை பெரிதாக கட்டி கொடுத்துவிட்டு எவ்வித அடிப்படை வசதியையோ நோயாளர்களை பராமரிப்பதற்கு எவ்விதமான தேவைகளையும் முன்னெடுக்க சுகாதார அமைச்சோ அல்லது மலையகத்தில் ஆட்சியில் உள்ள தலைவர்களோ முன்வரவில்லையென அகில இலங்கை மக்கள் முன்னேற்ற முன்னணியின் நிதிச்செயலாளர் ராஜ் பிரசாத் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்…
இந்திய அரசாங்கத்தினால் கட்டி கொடுக்கப்பட்ட புதிய கட்டிட தொகுதியில் ஆண் நோயாளர்கள் பிரிவு மற்றும் கர்பிணி தாய்மார் குழந்தைகள் பிரசவிக்கும் பிரிவு என பல பிரிவுகள் தனித்தனியே வைக்கப்பட்டாலும் பராமரிப்பு குறைவாகவே உள்ளது இதனால் வைத்தியசாலைக்கு செல்வோர் பாரிய இன்னல்களுக்கு உள்ளாகுவதோடு பெரும்பான்மை சமூக தாதிமார்கள் அதிகமாக காணப்படுவதால் மொழி ரீதியிலும் பல பிரச்சனைகளுக்கு உள்ளாகி வருவதாக பலர் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
வாக்குக்காக மட்டும் மஸ்கெலியா தொகுதியை குறிவைப்போர் கிளங்கன் வைத்தியசாலை பிரச்சனை தொடர்பில் எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவதில்லை. தண்ணீர் பற்றாக்குறை, மலசலக்கூடங்கள் பராமரிப்பின்மை என பல பிரச்சனைகளை கொண்டதாக கிளங்கன் வைத்தியசாலை காணப்படுகின்றது. எனவே மலையக தலைமைகள் முன்னின்று இக்குறைகளை இனங்கண்டு தீர்த்து வைப்பதோடு தமிழ் தாதியர்களையும் அதிகளவில் நியமிப்பதற்கான நடவடிக்கையையும் முன்னெடுக்குமாறு ராஜ் பிரசாத் குறிப்பிட்டார்.
நீலமேகம் பிரசாந்த்